பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசால் நடைபெற்று வந்த தடுப்பணை கட்டும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் பேசி வருவதாகவும் தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருவதாகவும், அவர் வந்த பின்னரே இது குறித்து பேச முடியும் என தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்விற்கு விலக்களிப்பது தொடர்பாக சட்டம் இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பியிருப்பதாகவும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார்.
தங்களுக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை இருக்கின்றது. சட்டமன்றத்தில் பலத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார். ஆசிரியர் தகுதி தேர்விற்கு கட் ஆப் மதிப்பெண் வைத்திருப்பது பாதிப்பு என்ற கருத்து குறித்து பரீசிலனை செய்யப்படும் என அவர் கூறினார்.
மேலும், பள்ளி மாணவர்களின் மனதை அமைதிப்படுத்த யோகா வகுப்பு கொண்டு வர ஆலோசித்து வருவதாகவும், முதலமைச்சரின் அனுமதி பெற்று அதனை செயல்படுத்துவோம் எனவும் தெரிவித்தார்.
இதேபோல் கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணியானது தற்போது நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர், பிரதமரிடம் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகின்றார் எனவும் சுட்டிக்காட்டினார். மேலும், நீதிமன்ற உத்திரவுப்படி சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் விளக்கமளித்தார்.
இரட்டை இலை சின்னம் தங்களிடம் இருக்கிறது, அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தை வைக்க கூடாது என கூற ஸ்டாலின் உள்ளிட்ட யாருக்கும் உரிமையில்லை எனவும், ஜெயலலிதாவால்தான் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது எனவும் தேரிவித்தார்.