கோவை மாவட்டம், தடாகம் அருகே உள்ள அருந்ததியர் காலனி மக்கள் மீது சாதிய ஆதிக்க சக்தியினர் நேற்றிரவு தாக்குதல் நடத்தியதில் இரு பெண்கள் உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவையை அடுத்த தடாகம் வரப்பாளையம் அருந்ததியர் காலனி அருகே நேற்று இரவு ரமேஷ் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய இருவர் சண்டையிட்டு கொண்டு இருந்தனர். அவர்களை அருந்ததியர் காலனியை சேர்ந்த பன்னீர்செல்வம் கண்டித்தாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் சிறிது நேரத்தில், இளைஞர்கள் ரமேஷ் மற்றும் ராமகிருஷ்ணன் சமூகத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட சாதிய ஆதிக்க சக்தியினர் உருட்டுக்கட்டைகளுடன் அருந்ததியர் காலனிக்குள் நுழைந்து அங்கிருந்த அருந்ததியர் சமூக மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகின்றது.
இதில், அருந்ததியர் காலனியை சேர்ந்த கிட்டான், அஜீத்குமார், ராதாமணி, பூங்கொடி, பன்னீர் செல்வம், கனகராஜ், கருப்பசாமி, சரவணகுமார் ஆகிய 8 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்த 8 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, இப்பகுதியில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் துடியலூர் காவல் துறையினர் மெத்தன போக்குடன் செயல்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தாக்குதல் நடத்தியதாக மற்றொரு பிரிவை சேர்ந்த 10 பேரை பிடித்து துடியலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.