கோவை மாநகரப் பகுதிக்கு உட்பட்ட உக்கடம் அல் அமீன் காலனி பகுதியில் குரங்குகள் சுற்றித்திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை உக்கடம் பகுதியில் அல் அமீன் காலனி உள்ளது. இங்கு சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
அல் அமீன் காலனியில் இருந்து சுமார் 5 கிமீ தாண்டி தான் குரங்குகள் நடமாட்டம் வழக்கமாக இருக்கும்.
இந்நிலையில் தற்போது அல் அமீன் காலனி குடியிருப்பு பகுதிக்கும் குரங்குகள் வரத் துவங்கியுள்ளன. இதனால், அப்பகுதி மகக்ள் அச்சமடைந்துள்ளனர்.
இன்று காலை முதல் அப்பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள், அங்குள்ள மின்கம்பங்கள் மீது ஏறி அங்கும் இங்கும் தாவி வருகின்றன.
மேலும், அங்குள்ள வீடுகளுக்குள்ளும் செல்ல முயல்வதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிக்கொண்டு வீடுகளுக்கு உள்ளேயே தஞ்சமடைந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள மளிகைக்கடை, பழக்கடை வியாபாரிகளும் குரங்குகளின் அட்டகாசத்தால் அச்சமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் சிலர் குரங்குகளை விரட்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே சமயம் மாநகராட்சி நிர்வாகமும் குரங்குகளை பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.