கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இன்று பிற்பகல் சுமார் ஒரு மணியளவில் தொடங்கிய கனமழையானது தொடர்ந்து பெய்து வருவதால், வால்பாறைக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
கோவை: வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
கோடை காலம் துவங்குவதற்கு முன்பில் இருந்தே கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனிடையே சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கோடை மழையும் பெய்து வருகிறது.
வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதன் காரணமாக இன்று முதல் வரும் மே.3ஆம் தேதி வரை கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகிறது.
பிற்பகல் சுமார் ஒரு மணியளவில் தொடங்கிய கனமழையானது தொடர்ந்து பெய்து வருகிறது.
இதன் காரணமாக வால்பாறை, சின்னக்கல்லார், சின்கோனா, சிறுகுன்றா, ஈட்டியார், பழைய வால்பாறை, ரொட்டி கடை, கருமலை, பச்சமலை, உருள்கள், வாட்டர் பால்ஸ் போன்ற எஸ்டேட் பகுதிகளில் வால்பாறைக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.