கோவையில் வ.உ.சி மைதானத்தில் ரூ.40 லட்சம் செலவில் 7 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சிதம்பரனாரின் முழு உருவ சிலையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். பின்னர் ஆட்சியர் உட்பட அதிகாரிகள், பொதுமக்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் 50 அடி நீளம், 45 அடி அகலம் கொண்ட 5 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டு வ.உ.சிதம்பரனருக்கு சிலை அமைக்கும் பணி தொடங்கியது. நடைபெற்றுவந்தது. இதற்கென செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கோவை வ.உ.சி. மைதானத்தில் பீடம் அமைக்கப்பட்டு 7 அடி உயரத்தில் வ.உ.சிதம்பரனாருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் பணிகள் முழுமையாக முடிவடைந்ததையொட்டி, இந்த சிலையை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
இந்த விழாவில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது, அவர்கள் புதிதாக திறக்கப்பட்ட வ.உ.சி.யின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து பல்வேறு அமைப்பினரும் வ.உ.சி. மைதானத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.