கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், 19-வது வார்டுக்குட்பட்ட வீரகேரளம் பெரிய தோட்டம் காலனி மனைப்பிரிவு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது ஒதுக்கீடு இடத்தை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த இடத்தில் உள்ள சீமைக் கருவேள மரங்களை அகற்றி அறிவிப்பு பெயர் பலகை வைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, அதேப் பகுதியில் வீடு வீடாகச் செல்லும் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்களின் பதிவேடு புத்தகங்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர், தொடர்ந்து மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை பார்வையிட்டார்.

பின், வீரகேரளம் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவை நேரில் சென்று மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் பார்வையிட்டார். தொடர்ந்து, வீரகேரளம் ஹவுசிங்யூனிட் பகுதியில் உள்ள குடிநீர் நீத்தேக்கத் தொட்டியைச் சுற்றி ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, வடவள்ளி 17-வது வார்டுக்குட்பட்ட குருசாமி நகர் பகுதியில் ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பூங்காவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டார்.
இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, உதவி ஆணையர் கே.ராமைய்யா, செயற்பொறியாளர் (பொ) சரவணக்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
