கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தில் ஏற்படும் உடல் உபாதைகளை தவிர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை மேயர் கல்பனா மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள், ஓ.ஆர்.எஸ் பவுடர் ஆகியவற்றை வழங்கினர்.
கோவை: காந்திபுரம் பகுதியில் கோடை வெப்பத்தை தவிர்க்கும் பொருட்டு அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
கோவை மத்திய மண்டலம் காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் கோவை மாநகராட்சி சார்பில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளை தவிர்க்கும் பொருட்டு தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள், ஓ.ஆர்.எஸ். பவுடர் ஆகியவற்றை வழங்கினர். மேலும், தொப்பி மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையாளர்கள் மரு.மோ.ஷர்மிளா, சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 33 இடங்களில் கோடை கால முகாம்கள் துவங்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு மண்டலத்தில், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், வடவள்ளி பேருந்து நிலையம், குமாரசாமி குளம், கிருஷ்ணம்பதி குளம், காந்திபார்க் பேருந்து நிறுத்தம், பூ மார்க்கெட் பேருந்து நிறுத்தம், இடையா்பாளையம் சந்திப்பு ஆகிய 7 இடங்களில் கோடை கால முகாம் துவங்கப்பட்டுள்ளது.
இதேபோல், தெற்கு மண்டலத்தில் தெலுங்குபாளையம் பிரிவு, சிவாலயா ஜங்சன், குனியமுத்தூர் ஜங்சன், சுண்டக்காமுத்தார் பேருந்து நிலையம், கோவைப்புதூர், இடையர்பாளையம் தெற்கு மண்டல அலுவலகம், குறிச்சி குளம் பொங்காளியம்மன் கோவில் அருகில், சுந்தராபுரம் வரிவசூல் மையம், சிட்கோ அருகில், சாரதாமில் சாலையில் உள்ள இரயில்நிலைய திருமண மண்டபம் ஆகிய 10 இடங்களிலும் கோடை கால முகாம்கள் நடைபெறுகிறது.
மேலும், வடக்கு மண்டலத்தில் துடியலூர் பேருந்து நிலையம், கணபதி பேருந்து நிலையம், அண்ணா நகர் சூர்யா மருத்துவமனை, சத்திரம் வீதி, சரவணம்பட்டி, காந்திமா நகர், ஆவாரம்பாயைம் 6 இடங்களிலும், கிழக்கு மண்டலத்தில் சிங்காநல்லூர் பேருந்து நிலையம், சித்ரா காளப்பட்டி சாலை, ஹோப்ஸ் கல்லூரி பேருந்து நிறுத்தம், செளரிபாளையம் பேருந்து நிறுத்தம் 4 இடங்களிலும் கோடை கால முகாம்கள் திறக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மத்திய மண்டலத்தில் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், காந்திபுரம் நகர பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை பேருந்து நிலையம், ரயில் பேருந்து நிலையம், மாநகராட்சி பிரதான அலுவலக பேருந்து நிலையம் ஆகிய 10 இடங்களிலும், என மொத்தம் 33 இடங்களில் கோடை கால முகாம்கள் இன்று முதல் நடத்தப்படுகிறது.
இந்த முகாம்களில் வார்டு பகுதிகளுக்கு உட்பட்ட சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலர்கள் ஒரு முகாமிற்கு தலா ஒரு செவிலியரை நியமித்து ORS Sachets மற்றும் குளுகோஸ் பவுடர் ஆகியவற்றை முகாம்கள் நடைபெறும் இடங்களில் விநியோகம் செய்யவும், கோடை காலத்தில் பொதுமக்கள் உடல் நலன் காக்கவும், கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.