கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி இன்று ஆட்சி அமைக்கிறது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றுள்ளனர். இந்த வெற்றியை கோவையில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கோவை: கர்நாடகாவில், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 135 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.
இதனை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவையும் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரையும் காங்கிரஸ் தலைமை அறிவித்தது.
பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் இன்று பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், சித்தராமையாவுக்கு முதல்வராக ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து டி.கே.சிவக்குமார் துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, அமைச்சரவையில் முதல் கட்டமாக 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றியை கோவையில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதன்படி, கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள தபால் நிலையம் அருகே கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் அழகு ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில், காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பினர்.