கோவை புலியகுளம் அடுத்த கோவில் வீதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் குழாய் மூலம் வரும் தண்ணீரில் சாக்கடை கழிவுகள் கலந்து வருவதால், பலமுறை மனு அளித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் புலியகுளம் பகுதியில் உள்ள கருப்பராயன் கோவில் வீதியில் குடிநீரில் சாக்கடை கழிவுகள் கலந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை புலியகுளம் பகுதியில் உள்ள 66வது வார்டுக்கு உட்பட்ட கருப்பராயன் கோவில் வீதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் இருந்து கடந்த சில மாதங்களாக சாக்கடை நீர் வெளியேறி வருகிறது.
குடிநீர் குழாயில் தண்ணீர் வரும் பொழுது முதலில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாக்கடை நீர் குடிநீருடன் கலந்து வருகிறது. இதனால் குடிநீரில் சாக்கடை துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் பொதுமக்கள் கடந்த சில மாதங்களாகவே குடிநீர் குழாயை பயன்படுத்தாமல், அருகே உள்ள குடியிருப்புகளிலிருந்து குடிநீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல முதியவர்கள் சில தூரம் நடந்து சென்று குடிநீர் எடுக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இப்படி இருக்க நேற்று குடிநீர் வந்த பொழுது ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாக்கடை நீரை வெளியேற்றி விட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள டேங்குகளில் நிரப்பினர்.
ஆனால் நேற்று வந்த நீர் முழுவதும் சாக்கடை கழிவுகள் கலந்து வந்துள்ளது. இதனால் தண்ணீர் டேங்குகளில் துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது. இதில் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தங்களது தண்ணீர் டேங்கில் இருந்த தண்ணீரை வெளியேற்றி தூய்மைப்படுத்தும் நிலை ஏற்பட்டது.
அதேபோல இன்று மாலையும் குடிநீர் வரும்பொழுது குழாயில் இருந்து சாக்கடை கழிவுகள் கலந்து வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் காலி குடங்களுடன் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சாக்கடை கலந்து வரும் நீர் தொடர்பாக பொதுமக்கள் கூறும் பொழுது பல மாதங்களாக இந்த பிரச்சனை உள்ளது என்றும் சாக்கடை கலந்து வரும் நீரால் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றும் இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.