கோவை அருகே கரடிமடை பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை நடைபெறுவது குறித்து தட்டிக்கேட்ட அதிமுகவை சேர்ந்த செல்வராஜ், திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது தொடர்பாக சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வரப்படும் என தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை: கரடிமடையில் அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வரப்படும் என தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை கரடிமடை பகுதியில் சமீபத்தில் அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் திமுகவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி, செல்வராஜ் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.
இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
கோவையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம் விற்பனை நடக்கிறது.
குறிப்பாக கோவை கரடிமடையில் அதிமுகவை சேர்ந்த செல்வராஜ், டாஸ்மாக்கில் மதுவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது குறித்து கேள்வி கேட்டதற்காக, அந்த டாஸ்மாக்கை நடத்தும் திமுகவை சேர்ந்த ராகுல், கோகுல் ஆகியோர் தாக்கியதில் அவர் பலியாகியுள்ளார்.
இவ்வளவு தைரியாமாக இந்த கொலையை நிகழ்த்தி உள்ளதாகவும் இந்த கொலை சம்பவத்தில் கொலையாளிகளுக்கு காவல்துறை ஆதரவாக உள்ளது. கோவையில் கள்ளதனமாக மதுவிற்பனையை தடுக்காத காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும். ஜனநாயக நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் அதிமுகவினர் தனித்தீர்மானம் கொண்டு வருவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.