பொள்ளாச்சி அருகே தன்னையும், தாயையும் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோமங்கலம் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பட்டியலின பெண் புகார் அளித்துள்ளார். பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சீ மலையாண்டிபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்திக். இவரது மனைவி சீதாலெட்சுமி. கடந்த ஒரு மாதமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீதாலட்சுமி, கணவர் கார்த்திக் இருவரும் சேர்ந்து சுய உதவிக் குழுவில் ரூபாய் 50,000 கடன் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், குழுவில் பெற்ற கடன் தொகையை கேட்டு நல்லாம்பள்ளியை சேர்ந்த துளசிமணி அவரது கணவர் மருதமுத்து உள்ளிட்ட சிலர் சீதாலட்சுமியிடம் மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது இதேபோல் நேற்று அங்கு வந்த அவர்கள் , சீதாலட்சுமியிடம் பணத்தைக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததுடன் அப்போது இரு தரப்பு பெண்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்த மருதமுத்து, சீதாலட்சுமி மற்றும் அவரது தாயார் முருகம்மாள் உள்ளிட்ட இருவரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த இருவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டியிலின பெண்கள் மீது மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் நடத்திய இந்த தாக்குதல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த தாக்குதல் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி அமைப்பினர், தமிழகத்தில் குறிப்பாக கோவை மாவட்டத்தில் பட்டியலின மக்கள் மீது மாற்று சமூகத்தினர் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் முறையாக வழக்குகள் பதிவு செய்வதில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக பட்டியலின பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.