கோவை தொண்டாமுத்தூர் அடுத்த வண்டிக்காரனூர் பிரிவு அருகே சாலையில் ரேக்ளா வண்டி சென்றுக் கொண்டிருந்தது. மாடு மிரண்டு, சாலையின் குறுக்கே ஓடியதால், பின்னால் வந்த இருசக்கர வாகனம், ரேக்ளா வண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் புவனேஸ்வரி என்ற பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: தொண்டாமுத்தூர் அருகே ரேக்ளா வண்டி மீது இருசக்கர வாகனம் மோதியதில் பெண் ஒருவர் பலியானார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த வண்டிக்காரனூர் பிரிவு அருகே ரேக்ளா வண்டி ஓட்டி வரும்போது மாடு மிரண்டு, திடீரென சாலையின் வலதுபுறமாக ஓடியது. இதனால், பின்னால் வந்த இருசக்கர வாகனம், ரேக்ளா வண்டி மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குப்பேபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (32) என்பவரது மனைவி புவனேஸ்வரி (25) சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இது குறித்து அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ரேக்ளா வண்டி யார் ஓட்டி வந்தது என்பது குறித்து சிசிடிவி காட்சி அடிப்படையில் தொண்டாமுத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளிவந்து காண்போரை இதயம் கனக்க செய்கின்றது.