குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் கோவை - பாலக்காடு சாலை வாளையார் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது, கேரள பதிவெண் கொண்ட காரில் 450 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் முயன்ற நபரை கைது செய்த போலீசார், அவரை வேவு பார்க்க வந்த மற்றொருவரையும் கைது செய்தனர்.
கோவை: கோவை மாவட்டம் வாளையார் அருகே ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு தலைவர் காமினி உத்தரவின் பேரில், கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் கோவை - பாலக்காடு சாலை வாளையார் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கேரளா பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அதில் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து காரை ஓட்டி வந்த கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சிகாப் (35) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வேவு பார்க்க வந்த கேஜி சாவடி பகுதியை சேர்ந்த பாஸ்கர் (25) என்பவரையும், போலீசார் மடக்கி பிடித்தனர்.
இவர்களிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பாஸ்கரன் என்பவர் மூலமாக போத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் மலிவு விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை கேரளாவில் உள்ள கள்ளச் சந்தைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 450 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.