கோடை விடுமுறையில் ஏராளமான மக்கள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வரும் நிலையில், சாய்பாபா கோயில் பகுதியில் இருந்து உதகைக்கு போதிய அரசு பேருந்து வசதி இல்லாததால், சுற்றுலா பயணிகள் பலரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவை: சாய்பாபா கோவில் பகுதியில் இருந்து உதகைக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால், பொதுமக்கள் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு பள்ளிகள் விடுமுறை என்பதாலும் கோடை வெயில் அதிகமாக இருப்பதாலும் சுற்றுலா பயணிகள் உதகை மற்றும் கோத்தகிரி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சாய்பாபா கோயில் பகுதியில் இருந்து அரசு பேருந்து கோவையில் இருந்து உதகை செல்கிறது.

இதனிடையே போதிய அரசு பயணிகள் பேருந்து இல்லாததால் உதகைக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள், அரை மணி நேரத்திற்கு ஒருமுறை அரசு பேருந்து இயக்கப்படுகிறது என கூறுகின்றனர்.

ஆனால் ஒரு மணி நேரம் காத்திருந்தும், அரசு பேருந்து வரவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அங்கு பயணிகள் பேருந்து வந்தவுடன் அங்குள்ள பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு அந்த வண்டியில் ஏறுவது வாடிக்கையாகி வருகிறது.

இதனால் அதிகமான அரசு பேருந்துகளை உதகைக்கு இயக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.