தூத்துக்குடியை சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் ஜெகன், துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போது, குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர் குடும்ப பிரச்சினை காரணமாக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பெருமாள் குளத்தை சேர்ந்தவர் ஜெகன் (32). இவர், துடியலூர் அடுத்துள்ள கதிர்நாயக்கன் பாளையத்தில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் பயிற்சி கல்லூரியில் (சி.ஆர்.பி.எப்) பாதுகாப்பு பணியில் (கோட்டர் கார்டு காப்பு அலுவலில்) ஈடுபட்டு வந்துள்ளார். இவர் 77 பட்டலியன் ஏ கம்பெனியில் பணியாற்றி வந்தார்.
இதனிடையே இவரது முதல் மனைவியுடனான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 2வது திருமணம் செய்துள்ளார். இதன் காரணமாக குடும்ப பிரச்சனை பெரிதாகி உள்ளதாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் இன்று மதியம் பாதுகாப்பு பணியில் இருந்தபோது, தனக்குத்தானே எஸ்.எல்.ஆர் துப்பாக்கியால் 2 ரவுண்டு கழுத்தில் சுட்டுக்கொண்டார். அவர் சுட்டபோது குண்டு கழுத்தில் இருந்து தலையின் வழியாக சென்றுள்ளது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம், துடியலூர் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து ஜெகனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெகன் சுட்டுக்கொண்ட துப்பாக்கியையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.