தொழிலாளர்களுக்கு எதிரான நிபந்தனைகளை கொண்ட உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்திடும்படி கூறும் ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து மதுக்கரையில் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தி ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை: மதுக்கரை நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மதுக்கரை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சுமார் 62 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனம் ஊழியர்களுக்கு உறுதிமொழி பத்திரத்தை வழங்கி அதில் கையெழுத்திடும்படி தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 22 நிபந்தனைகளை கொண்ட அந்த உறுதிமொழி பத்திரத்தில் தொழிலாளர்களுக்கு எதிரான பல்வேறு அம்சங்கள் உள்ளதாக கூறி அதில் கையெழுத்திட ஊழியர்கள் மறுத்துள்ளனர். ஆனால் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டால் தான் வேலை செய்ய முடியும் என கூறியதால் நேற்று மதியம் முதல் 62 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து நகராட்சி அலுவலகத்திலேயே காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று இரவு முழுவதும் அங்கேயே உணவு சாப்பிட்டு தூய்மை பணியாளர்கள் தங்கிய நிலையில், இரண்டாவது நாளாக மீண்டும் பணியை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.