கோவையிலிருந்து திருமண நிகழ்வுக்காக கரூர் நோக்கி சென்ற கார் மீது பல்லடம் அடுத்த மாதப்பூர் என்ற இடத்தில் கேரளாவிற்கு சென்ற லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
திருப்பூர்: பல்லடம் அடுத்த மாதப்பூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம் அருகே இன்று காலை 10 மணி அளவில் கோவையில் இருந்து கரூர் நோக்கி திருமண நிகழ்விற்காக காரில் பயணித்த குடும்பத்தினர் திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கார், பல்லடம் அருகே மாதப்பூர் என்ற இடத்தில் சென்றபோது கரூரிலிருந்து கேரளாவிற்கு சென்ற லாரி ஒன்று கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மகாலட்சுமி(27), சோமுகுமார்(38), பிரனேஷ்(38), நித்திஷ்(11), க்ரிதீஷ்(11), மற்றும் சசிரேகா(57) ஆகிய ஆறு பேர் பலத்த காயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் காவல்துறையினர் காயமடைந்த ஆறு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆறு பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் பல்லடத்தில் இருந்து பொங்கலூர் வரை சாலையின் நடுவே தடுப்புகள் வைக்காததே இந்த விபத்திற்கு காரணம் எனவும் அதிக அளவிலான விபத்துகளை தடுக்க சாலை நடுவே தடுப்புகள் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.