சூலூர் அருகேயுள்ள கருமத்தம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான கூடம் முறையான அனுமதியின்றியும், 24 மணி நேரமும் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதால், அதனை பூட்டி சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக மகளிரணி சார்பில் மதுபான கூடத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: சூலூர் அருகே சட்டவிரோதமாக 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் மதுபான கூடத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுற்றுத்தி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சூலூர் அருகேயுள்ள கருமத்தம்பட்டியில் தனியார் மதுபான கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக்கூடம் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு கருமத்தம்பட்டி நகராட்சியில் முறையான அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.
மேலும் சட்டவிரோதமாக 24 மணிநேரமு செயல்பட்டு வருவதாக கூறி மதுபான கூடம் முன்பு பாஜக மாவட்ட மகளிர் அணி பொருளாளர் கார்த்திக்காயணி தலைமையில் கருமத்தம்பட்டி பாஜகவினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, கடந்த 2 வருடங்களாக அனுமதியற்ற கட்டிடத்தில் தனியார் மதுபான கூடம் இயங்கி வருகிறது. 24 மணி நேரமும் இந்த கடை செயல்படுகிறது. எனவே இந்த கடையை உடனே சீல் வைத்து பூட்ட வேண்டும் என தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சிறிது நேரம் கடையை மூடினர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினர்.
இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் சமாதானமாகி அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே அங்கு வந்த கருமத்தம்பட்டி டி.எஸ்.பி தையல்நாயகி சம்மந்தப்பட்ட தனியார் மதுபான கூடத்தை ஆய்வு செய்தார்.