வால்பாறை அருகே சுற்றுலா வந்த ஜாகர் (21) என்ற இளைஞர், பிர்லா அருவியில் புகைப்படம் எடுக்கும் போது தவறி விழுந்து மாயமானார். இவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், 5 நாட்களுக்கு பிறகு இளைஞர் ஜாகரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
கோவை: வால்பாறைக்கு சுற்றுலா வந்து அருவியில் புகைப்படம் எடுக்கும் போது நீரில் தவறி விழுந்து காணாமல் போன இளைஞர் உடல் 5 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.
கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ஜாஜூ என்பவரது மகன் ஜாகர் (21). இவர் தனது தோழியுடன் கடந்த 28ஆம் தேதி வால்பாறை பகுதியில் சுற்றி பார்த்துவிட்டு சோலையாறு எஸ்டேட் பகுதியில் உள்ள பிர்லா அருவிக்கு சென்றுள்ளனர்.
அங்கு அருவி அருகில் புகைப்படம் எடுக்க சென்றுள்ளனர். அப்போது கால் தவறி ஜாகர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் அவருடைய உடலை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், 5 நாட்களுக்குப் பிறகு இன்று உடல் மீட்கப்பட்டது, அவருடைய உடலை வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.