கோவை நவக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த கேரளாவை சேர்ந்த பொறியியல் மாணவர்களான எம். அர்ஜூன் (21), வி. அர்ஜூன் (22), அக்சய் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரை கிலோ அளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் நவக்கரை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் கே.ஜி.சாவடி போலீசார் நவக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மாணவர் ஒருவர் கஞ்சா போதையில் இருந்துள்ளார். அவரை போலீசார் காவல்நிலையம் அழைத்து சென்று கஞ்சா எப்படி கிடைக்கிறது என்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நவக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் 2ஆம் ஆண்டு படிக்கும் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அர்ஜூன் (22) என்பவர், திருச்சூர் பேருந்து நிலையம் சென்று வினித் என்பவரிடம் கஞ்சாவை வாங்கி வந்து உடன் படிக்கும் நண்பர்கள் உதவியுடன் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் மாணவர்கள் தங்கி இருந்த அறைக்கு சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அறையில் இருந்து 500 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த திருச்சூரை சேர்ந்த எம். அர்ஜூன் (21), எர்ணாகுளத்தை சேர்ந்த வி. அர்ஜூன் (22), திருச்சூரை சேர்ந்த அக்சய் (22) ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட மாணவர்கள் 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.