உதகை ரயில் நிலையம் அருகேயுள்ள சாலையில் பாதாள சாக்கடை சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக திறந்து கிடக்கும் நிலையில், அடிக்கடி விபத்துகள் நிகழ்வதால், நகராட்சி நிர்வாகம் இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி: உதகை ரயில் நிலையம் அருகே சாலையில் திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையை உடனடியாக மூடி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உதகை ரயில் நிலையம் அருகேயுள்ள சாலையில் பாதாள சாக்கடை செல்கிறது. இந்த பாதாள சாக்கடையானது கடந்த ஒரு மாத காலமாக திறந்தே கிடக்கிறது. இதனால் அங்கு தடுப்பு பலகைள் வைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து தடுப்பு பலகை வைக்கப்பட்டது.
தடுப்பு பலகைகள் வைத்தும் அந்த இடத்தில் அசம்பாவிதங்கள் நடந்த வண்ணம் இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் ஆகியவை விபத்திற்குள்ளானது. அது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் பாதசாரிகள் கவனமாக செல்லவில்லை என்றால் பாதாள சாக்கடைக்குள் விழும் நிலை உள்ளது.
இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளி குழந்தைகள் அந்தப் பாதையை தான் பயன்படுத்துவார்கள்.
எனவே அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படும் முன்னர் நகராட்சி நிர்வாகம் மக்களின் நலன் கருதி உடனடியாக அதனை சீரமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.