தேனி மாவட்டத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற நர்சிங் கல்லூரி மாணவர், தனது நண்பருடன் பொள்ளாச்சி சாலை ஈச்சனாரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில், ஹரிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலை ஈச்சனாரி அருகே இருசக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கோவில்பட்டி, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஆண்டவர் என்பவரது மகன் ஹரிகிருஷ்ணன் (21). இவர் ஈச்சனாரி அருகே தனியாக அறை எடுத்து தங்கி, அங்குள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவரது அறையில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆகாஷ் (18). என்பவரும் தங்கி அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு அறையில் இருந்த ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆகாஷ் இருவரும் அவரது நண்பர்களான ஆதித்யா என்பவரது இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு, டீ குடிக்க மலுமிச்சம்பட்டி நோக்கி சென்றுள்ளனர்.

பின்னர் மீண்டும் அறைக்கு திரும்பி வந்த போது மலுமிச்சம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை நடுவே இருந்த இரும்பு தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்ட ஹரிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த ஆகாஷை மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.