கோவை குனியமுத்தூர் வழியாக செல்லும் அரசு பேருந்தில் பயணித்த தமிழ்ச்செல்வி என்ற பேராசிரியையின் பையில் இருந்த ஒரு சவரன் தங்க நாணயத்தை திருடிச்சென்ற அடையாளம் தெரியாத பெண் பயணியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை: கோவை சுகுணாபுரம் அருகே அரசு பேருந்தில் தனியார் கல்லூரி பேராசிரியையின் பையில் இருந்த ஒரு சவரன் தங்க நாணயத்தை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் மதுக்கரையை சேர்ந்த மாரப்பன் என்பவரது மனைவி தமிழ்ச்செல்வி (57). இவர் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை டவுன்ஹால் சென்ற தமிழ்ச்செல்வி ஒரு சவரன் தங்க நாணயத்தை வாங்கியுள்ளார். பின்னர் மீண்டும் காந்திபுரத்தில் இருந்து மதுக்கரை செல்ல அரசு பேருந்தில் ஏறி வந்துள்ளார். அப்போது சுகுணாபுரம் மைல் கல் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, அவரது கைப்பை பேருந்தில் விழுந்ததாக தெரிகிறது.
அப்போது அந்தப் பையில் இருந்த ஏடிஎம் கார்டு மற்றும் ஒரு சவரன் தங்க நாணயத்தை வைத்திருந்த மஞ்சள் பை மட்டும் மாயமானதாக கூறப்படுகிறது. மேலும் அவரது அருகில் அமர்ந்திருந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணும் மாயமானது தெரியவந்தது.
இதையடுத்து, தமிழ்ச்செல்வி குனியமுத்தூர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தங்க நாணயத்துடன் தப்பிச்சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.
ஓடும் பேருந்தில் பேராசிரியையிடம் இருந்து தங்க நாணயம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.