கோவை மாநகராட்சியின் கிழக்கு மற்றும் மேற்கு மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தார் சாலை பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தார் சாலையின் தரம் குறித்தும் பரிசோதனை மேற்கொண்டார்.
கோவை: கோவை மாநகராட்சியின் கிழக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் நடைபெற்று வரும் தார் சாலை பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 23 தீபா மில் ரோடு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 2.09 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது குறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் வார்டு எண்.22 குமுதம் நகா் பகுதியில் தமிழ்நாடு நிலையான நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் 1.96 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும்,

மேற்கு மண்டலம் வார்டு எண்.44க்குட்பட்ட சபாபதி வீதி பகுதியில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.15.83 லட்சம் மதிப்பீட்டில் 213 மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, தாரின் வெப்பத்தை நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா நேரில் பரிசோதனை செய்து ஆய்வு செய்தார். தொடர்ந்து நகராட்சி நிர்வாக இயக்குநர் செய்தியாளர்களை சந்தித்த போது பேசியதாவது,
கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு சாலை பணிகள் இன்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில் சுமார் 2500 கிலோ மீட்ட தொலைவிற்கு சாலைகள் உள்ளன. பாதாள சாக்கடை திட்டப்பணிகள் பல்வேறு இடங்களில் தற்போது நடைபெற்று வருகிறது.
பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவடைந்த பகுதிகளில் தார்சாலை அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. 2022-23, 2023-24 ஆகிய இரண்டு ஆண்டுகள் நிதியினை கொண்டு ஏறக்குறைய 563 கிலோ மீட்டா் தொலைவிற்கு அமைக்கும் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் 206 கிலோ மீட்டர் தொலைவிற்கு பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடையும். கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள 100 வார்டு பகுதிகளிலும் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளில், பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த பின்னர் அங்கு வெட்மிக்ஸ் போடப்பட்டு, உடனடியாக சிமெண்ட் சாலை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தார் சாலைகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு, தார் சாலையின் தரம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி உறுதி செய்யப்படும்.
மேலும், மாநகராட்சி பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைத்துறையின் மூலமாக சாலை அமைக்கும் பணி நடைபெறும் போது, குடிநீர் குழாய் பதிக்கும் பணி விரிவுபடுத்தப்பட்டு, தடாகம் சாலை விரைவாக அமைக்க மாநகராட்சி ஆணையாளர் சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களோடு ஆலோசனை செய்து, பணியை துரிதப்படுத்தி விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிர்வாக பிரச்சனை இருப்பின் விரைவில் சரி செய்யப்படும். சீர்மிகு திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவு செய்யப்பட்டுள்ளது மீதமுள்ள பணிகள் விரைவில் நிறைவு பெறும். மேலும் செம்மொழி பூங்கா ரூ.172 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள ஓப்பந்தப்புள்ளி இம்மாத இறுதியில் கோரப்படவுள்ளது. பின்னர் இப்பணிகள் விரைவில் துவங்கப்படும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.