திருப்பூரில் பேசிய முன்னாள் பாஜக எம்.பி கார்வேந்தன், இந்திய நாட்டின் குடிமகனாக இருப்பவர் வெளிநாட்டிற்கு சென்றால் நம் நாட்டின் பெருமைகளை பேச வேண்டுமே தவிர, நம் நாடு மற்றும் தலைவர்கள் குறித்து அவதூறாக பேசுவது அவர் இந்திய குடிமகனா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றார்.
திருப்பூர்: ராகுல் காந்தி இந்தியர் தானா என்ற சந்தேகம் ஏற்படுவதாக முன்னாள் பாஜக எம்.பி கார்வேந்தன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் பல்லடம் சாலை வித்தியாலயம் பகுதியில் உள்ள திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜகவை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் குறித்த இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, 9 ஆண்டுகளில் பாஜக பல்வேறு சாதனைகளை செய்திருகிறது.

தமிழகத்திற்கு பெருமை சேர்க்க கூடிய வகையில் யோகாவை சர்வதேச அளவில் கடைபிடிக்கும் வகையில் சர்வதேச யோகா தினம் கொண்டுவரப்பட்டுள்ளது. அம்பேத்கரை பற்றி பலரும் பேசி வரக்கூடிய சூழ்நிலையில் அம்பேத்கர் பிறந்த, வாழ்ந்த, படித்த, இறந்த என ஐந்து இடங்களை ஒருங்கிணைத்து பஞ்ச திருத்தலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் அனைத்திலும் உள்ள இந்திய தூதரகங்களில் அம்பேத்கரின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டு அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் எதிர்க்கட்சிகள் எத்தனை கூட்டங்கள் போட்டாலும் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்றது போல பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறுவார்.
அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசியது குறித்த கேள்விக்கு, இந்திய நாட்டைச் சேர்ந்தவர் வெளிநாடுகளுக்கு செல்லும்போது நாட்டின் மீது பற்று இருந்தால் இந்திய நாட்டின் பெருமைகளை பற்றி பேசியிருக்க வேண்டுமே தவிர இந்தியாவையும் தலைவர்களையும் பற்றி அவதூறாக பேசியதால் அவர் இந்தியரா என்ற சந்தேகத்தை எழுப்பக் கூடியதாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.