தடாகம் அடுத்த நம்பர் 1 நாயக்கன்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த செங்கல் சூளைக்காக தோண்டப்பட்ட குழியில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நீரில் குளித்து விளையாடிய ஹரீஸ் (14) என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: தடாகம் அருகே சட்டவிரோதமாக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு உத்தரவை மீறி செங்கல் தயாரிக்க தோண்டப்பட்ட சட்ட விரோத பள்ளங்களால் வன விலங்குகள், கனிம வளங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே அங்கு தோண்டப்பட்ட பள்ளங்களையும் வெட்டி எடுக்கப்பட்ட செம்மண்ணை கொண்டு மூடவும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நம்பர் 1 நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் தோண்டப்பட்ட குழியில் மழைநீர் தேங்கி இருந்தது.
இந்நிலையில் சாந்திமேடு பகுதியை சேர்ந்த 5 பள்ளி சிறுவர்கள் அந்த குழியில் இருந்த மழைநீரில் குளித்து விளையாடியுள்ளனர். பின்னர் அனைவரும் வெளியே வந்த போது வேல்முருகன் என்பவரது மகன் ஹரீஸ் (14) , நீரில் இருந்த கட்டை ஒன்றை எடுக்க முயன்றதாக தெரிகிறது.

சிறுவனுக்கு நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக அங்கிருந்த 10 அடி ஆழ நீரில் சிறுவன் மூழ்கியுள்ளார். சக சிறுவர்கள் அங்கிருந்த பெரியவர்களிடம் கூறிய பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, அங்கு வந்த பெரியநாயக்கன் பாளையம் போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சிறுவன் ஹரீஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அதே பகுதியில் வன விலங்குகளின் எச்சமும் கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் நில உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.