திருப்பூரிலிருந்து சமீபத்தில் பல்லடத்திற்கு மாறுதலாகி வந்த பத்திர பதிவாளர்களான பிரவீனா, ஈஸ்வரி ஆகியோர் வந்த பின் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனை கண்டித்து வரும் ஜூன் 12 ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக பத்திரப்பதிவு எழுத்தாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
திருப்பூர்: பல்லடம் பத்திரப்பதிவு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதை கண்டித்து, வரும் 12ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக பத்திரப்பதிவு எழுத்தாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தின் கீழ் 39 கிராமங்கள் அடங்கியுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் பத்திரப்பதிவு மூலம் அதிகப்படியான வருவாய் தரும் பகுதிகளில் பல்லடமும் ஒன்று.
பத்திர பதிவாளர்களான பிரவீனா, ஈஸ்வரி ஆகியோர் சமீபத்தில் திருப்பூரில் இருந்து பணி மாறுதலாகி பல்லடம் வந்துள்ளனர். இவர்கள் வந்த பின் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக பத்திர எழுத்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் வரும் ஜூன் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ஒரு வாரம் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்வதில்லை என பல்லடம் பகுதி பத்திர ஆவண எழுத்தர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதுகுறித்து பத்திர எழுத்தாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது,

பல்லடம் பகுதியில் நூற்றுக்கும் அதிகமான பத்திர ஆவண எழுத்தர்கள் உள்ளனர். சமீப காலமாக தேவையற்ற காரணங்களை கூறி பத்திரங்களை நிராகரிப்பதும், பதிவு செய்யாமல் திருப்பி அனுப்புவதுமான செயல்களில் பத்திரப்பதிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பத்திரங்களின் மதிப்புக்கு ஏற்ப லஞ்சம் நிர்ணயிக்கப்பட்டு கட்டாயமாக்கப்படுகிறது. முதல்வர் தனிப்பிரிவு, பத்திரப்பதிவு ஐஜி, பதிவுத்துறை அமைச்சர், மாவட்ட பதிவாளர், லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்தும் லஞ்சம் வாங்குவது குறைந்த பாடில்லை.
எனவே பத்திரப்பதிவு அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்டித்து நாளை மறுநாள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை ஒரு வாரத்திற்கு பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படாது என தீர்மானித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிப்போம். எங்களது போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.15 லட்சம் வரை அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.