பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவாளர்களாக பணியாற்றி வரும் பிரவீனா மற்றும் ஈஸ்வரி ஆகிய இருவரும் லஞ்சம் கேட்பதாகவும், அலுவலகத்திற்கு வருபவர்களிடம் மரியாதை குறைவாக நடப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்து பல்லடம் பத்திர எழுத்தாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பத்திரப்பதிவு அதிகாரிகளை கண்டித்து பத்திர எழுத்தாளர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தின் கீழ் 39 கிராமங்கள் அடங்கியுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் பத்திரப்பதிவு மூலம் அதிகப்படியான வருவாய் தரும் பகுதிகளில் பல்லடமும் ஒன்று.
பத்திரப்பதிவாளர்களான பிரவீனா, ஈஸ்வரி ஆகியோர் சமீபத்தில் திருப்பூரில் இருந்து பணி மாறுதலாகி பல்லடம் வந்துள்ளனர். இவர்கள் வந்தபின் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக பத்திர எழுத்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இன்று முதல் சனிக்கிழமை வரை ஒரு வாரத்திற்கு பத்திரப்பதிவு பணிகள் நடைபெறாது என பல்லடம் பகுதி பத்திர ஆவண எழுத்தர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.
இதன் எதிரொளியாக நேற்று முன்தினம் பத்திரப்பதிவு துறை மேற்கு மண்டல டிஐஜி சாமிநாதன் பல்லடம் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் பத்திர எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் பல்லடம் பத்திரப்பதிவு அலுவலக பதிவாளர்கள் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேச்சு வார்த்தைக்கு ஒப்புக்கொள்ளாததால் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் உறவினர் சுப்பராயன் என்பவரை நாடி நேற்று இரவு பல்லடத்தில் உள்ள பயணியர் மாளிகையில் செய்தி துறை அமைச்சரின் உறவினர் சுப்பராயன் மற்றும் பல்லடம் திமுக நிர்வாகிகள் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களை ரகசியமாக அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இன்று முதல் அறிவித்தபடி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

நாள் ஒன்றுக்கு பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திர எழுத்தாளர்கள் போராட்டத்தால் 15 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பத்திர பதிவு அலுவலகங்களிலும் லஞ்சத்தை ஒழிக்க இந்த போராட்டம் முன்னுதாரணமாக அமையும் எனவும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பத்திர எழுத்தாளர்களின் போராட்டத்தால் பத்திரப்பதிவு அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனால் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பத்திரங்களை பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.