வடவள்ளி அடுத்த ஐ.ஓ.பி காலனி பகுதியை சேர்ந்த சுகன்யா என்பவர் வளர்த்து வந்த 2 நாய்கள் அடுத்தடுத்த நாட்கள் காணாமல் போன நிலையில், அவரது வீட்டில் மர்ம நபர்கள் வந்து சென்ற தடம் இருந்ததால், கொள்ளையடிக்க இடையூறாக இருந்த நாய்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக புகார் அளித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி அருகே கொள்ளையடிக்க இடையூறாக உள்ள நாய்களை மர்ம நபர்கள் திருடி வருவதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வடவள்ளி அடுத்த ஐ.ஓ.பி காலனி பகுதியை சேர்ந்தவர் சுகன்யா. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ள தனி வீட்டில், தனது கணவருடன் சில ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில், அவர் தனது வீட்டில் இரண்டு நாய்கள் வளர்த்து வந்ததாகவும், அந்த நாய்கள் இருப்பதால் அப்பகுதியில் வரும் வன விலங்குகள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களை கண்டால் சத்தம் போட்டு காட்டிக் கொடுத்து விடும்.
இதனால் அவர்கள் பயமின்றி வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் மாலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது நாய் ஒன்றை காணவில்லை கூறப்படுகிறது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் சிறிது நேரம் அக்கம்பக்கத்தில் தேடி வந்தனர். பின்னர் அது தானாக வந்து விடும் என எண்ணி வீட்டிற்கு சென்று விட்டனர். மீண்டும் இரவு நேரத்தில் நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டுள்ளது.
வன விலங்குகள் நடமாட்டம் அப்பகுதியில் இருப்பதால் அதற்காக நாய்கள் சத்தம் போடுவதாக நினைத்து உறங்கியுள்ளனர். பின்னர் காலை எழுந்து பார்க்கும் போது அந்த மற்றொரு நாயும் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், மர்ம நபர்கள் வீட்டிற்குள் வந்து சென்ற தடயங்கள் இருந்துள்ளது. இதனையடுத்து, இதுகுறித்து அவர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, வீட்டிற்குள் புகுந்து கொள்ளை அடிக்கும் நபர்கள், நாய்களின் சத்தத்தால் பயந்து வந்த நிலையில், அதனை திருடி விட்டால் அவர்கள் அப்பகுதியில் கொள்ளை சம்பவங்களுக்கு இடையூறு இருக்காது என்பதால் நாய்களை திருடி இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.