ஈஷா தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சியில் உரையாற்றிய சத்குரு ஜக்கி வாசுதேவ், செய்யும் செயலின் மீதும் அதன் நோக்கத்தின் மீதும் பத்தி இருந்தால், அவர்களுடைய திறமையை நம்மால் எளிதில் அதிகரிக்க முடியும் என தெரிவித்தார்.
கோவை: செயலின் மீது பக்தி இருந்தால், திறமையை எளிதில் உருவாக்க முடியும் என ஈஷா நிகழ்வில் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
கோவை ஈஷா யோகா மையத்தில் மனிதன் - ஒரு வளம் அல்ல (Human Is Not A Resource) என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சத்குருவின் வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் இடம்பெற்ற ஒரு கேள்வியில், ஈஷாவில் குறைந்த அனுபவம் கொண்ட மக்களிடம் நீங்கள் மிகப்பெரிய பொறுப்புகளை வழங்கி சிறப்பாக ஈஷாவை நடத்துகிறீர்கள். இந்த மாயாஜல திறமையின் ரகசியம் என்ன? என கேட்கப்பட்டது.
அதற்கு சத்குரு பதில் அளிக்கும் போது, “இது மாயாஜலம் கிடையாது. இது நிர்வாக திறன். அதை நீங்கள் மாயாஜலம் என சொன்னால் அந்த திறனின் மதிப்பையே நீங்கள் நீக்கிவிடுகிறீர்கள். பொதுவாக, நாம் சூழ்நிலைகளை அல்லது மனிதர்களை நிர்வகிப்பது குறித்து அதிகம் பேசுகிறோம். அவை இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் கிடையாது.
மேலும், பொதுவாக, அனைவரும் சூழ்நிலைகளையே நிர்வகிக்க அதிகம் முயற்சி எடுக்கிறார்கள். ஆனால், என்னை பொறுத்தவரை மனிதர்களை நிர்வகிப்பது தான் சிறந்தது என பார்க்கிறேன். நீங்கள் மனிதர்களை அவர்களின் உச்சபட்ச நிலையில் வைத்திருந்தால், சூழ்நிலைகள் தானாக சரியாகிவிடும்.
மேலும், திறன் வளர்ப்பு தொடர்பாக பேசுகையில் நான் ஒருவரிடம் திறமை இருக்கிறதா இல்லையா என்று பார்க்கமாட்டேன். அவரிடம் அவர் செய்யும் செயலின் மீதும், அதன் நோக்கத்தின் மீது பத்தி இருக்கிறதா என மட்டுமே பார்ப்பேன். ஒருவரிடம் பக்தி இருந்தால் அவரின் திறமையை அதிகரிப்பது உள்ளிட்ட மற்ற விஷயங்களை நம்மால் எளிதில் செய்து விட முடியும்.
ஜுன் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்வேறு தொழில் துறை வல்லுநர்கள் மற்றும் தலைமைப் பண்பு பயிற்சியாளர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.
இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியதாவது,

இஸ்ரோவில் பணிபுரிபவர்களை மேலாண்மை செய்வதற்கு தனியாக HR எனப்படும் மனித வளத்துறை கிடையாது. இஸ்ரோவில் சேரும் நபர்களின் ஈடுபாட்டையும், ஆர்வத்தையும் அதிகரிப்பது இஸ்ரோவில் உள்ள தலைவர்களின் பணியாக பார்க்கிறோம்.
அதனால், என்னை போன்ற பல தலைவர்கள் இப்பணியை நாங்களே முன்னெடுத்து செய்கிறோம். ராக்கெட் ஏவுவதில் எந்தளவுக்கு கவனம் கொடுக்கிறோமோ அதே அளவிற்கு இஸ்ரோவில் இருப்பவர்களின் ஈடுபாட்டையும், ஆர்வத்தையும் அதிகரிப்பதில் கவனம் கொடுக்கிறோம். இது தான் இஸ்ரோவின் வெற்றி ரகசியம்.
நம்முடைய தேசத்தில் ஏராளமான திறமைகள் உள்ளன. அந்த திறமைகளை கண்டறிந்து அதை அதிகரிக்கும் விதமான ஒரு கழ்நிலையை உருவாக்கினால், ஏராளமான திறமை மிகுந்த மனிதர்கள் உருவெடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கார்ப்பரேட் வட்டாரங்களில் சி.இ.ஓ தொழிற்சாலை என அழைக்கப்படும் இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தின் மனித வளத் துறையின் செயல் இயக்குநர் அனுராதா பேசியதாவது,

நாங்கள் பல தலைமுறைகளாக, ஒருவர் பின் ஒருவராக தலைவர்களை உருவாக்கி இருக்கிறோம். தலைவர்களை உருவாக்கும் தலைவர்கள் என்ற மனநிலை தான் எங்களின் தலைவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கிறது. இந்த ஒரு விஷயத்தை நாம் தொடர்ந்து இடைவிடாமல் மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இவர்களை தவிர, உஜ்ஜீவன் ஸ்மால் பினான்ஸ் வங்கியின் நிறுவனர் சமித் கோஷ், ஐ.ஐ.எம் பெங்களூரு நிறுவனத்தின் பேராசிரியர் வானதி ஸ்ரீனிவாசன், ஓலா எலக்ட்ரானிக் நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினர் அமித் அஞ்சால், டாடா டிஜிட்டல் சி.இ.ஓ பிரதீக் பால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.