சாலையில் வாகனங்களை ஓட்டும் போது செல்போன்கள் பயன்படுத்தக் கூடாது எனவும் இதனால் கவனம் சிதறி விபத்துக்கள் ஏற்படும் எனவும் சாலை பாதுகாப்பு விதி உள்ளது. மேலும், வாகனங்களை ஓட்டிக்கொண்டிருக்கையில் செல்போன்கள் பயன்படுத்துவதாலேயே அதிகப்படியான விபத்துகள் ஏற்பட்டு வருகிறது என புள்ளிவிபரங்களும் கூறுகிறது.
இருப்பினும பெரும்பாலான வாகன ஓட்டிகள் சாலையில் வாகனங்களை இயக்கிக்கொண்டிருக்கையில் செல்போன்கள் பயன்படுத்துவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டே வருகிறது. அதிலும் குறிப்பாக டேக்சி உள்ளிட்ட வாகன ஓட்டுநர்களே இவ்வாறான தவறுகளில் அதிகப்படியாக ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதுபோன்ற குற்றச்சாட்டில் தற்போது சிக்கியுள்ளதே உபர் என்னும் கால்டாக்சி நிறுவனத்தின் டேக்சி ஓட்டுநர்கள். வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை தொடர்வதற்காக சாலையில் வாகனங்களை இயக்கியபடியே செல்போன்களிலும் பேசி வருகின்றனர் உபர் டேக்சி ஓட்டுநர்கள்.
தங்களது டேக்சியில் வாடிக்கையாளர்கள் பயணித்து வருவதையும், அவர்களது பாதுகாப்பு குறித்து எவ்வித அச்சமுமின்றி அடுத்து வரும் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதற்காக செல்போன்களில் உரையாடியபடியே வாகனங்களையும் இயக்குகின்றனர்.

அதுபோன்றே கடந்த சனிக்கிழமையன்று உபர் டேக்சி வாகன ஓட்டுநர் ஒருவர் கோவை புரூக் பான்டு சாலை மேம்பாலத்தில், போக்குவரத்து நெரிசலான நேரத்தில் செல்போனில் பேசியபடியே தனது டேக்சி வாகனத்தையும் இயக்கினார்.
இதுபோன்ற சம்பவங்கள், டேக்சி ஓட்டுநர்களுக்கு மட்டும் போக்குவரத்து விதிமுறைகளில் தளர்வு ஏதேனும் உள்ளதா என்ற கேள்வியினை மக்கள் மத்தியில் எழுப்புகிறது. இதுபோன்ற டேக்சி ஓட்டுநர்கள் தொடர்ந்து செல்போன்களில் பேசியபடியும், ஜிபிஎஸ் உள்ளிட்ட செயலிகளை இயக்கியபடியுமே வாகனங்களை ஓட்டுவது இதர வாகன ஓட்டிகளில் உயிர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தாதா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. உபர் உள்ளிட்ட டேக்சி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள உத்தரவாதம் கொடுக்க வேண்டும்.
கோவை நகர போக்குவரத்து காவல்துறை இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்களுக்கு தகுந்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். மேலும், இதுபோன்ற சாலை பாதுகாப்பு விதிகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் உள்ளிட்ட தண்டனைகளும் வழங்க வேண்டும் என இதர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.