பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் நேற்று காலை கோவை சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சரக்கு ஆட்டோவில் 500 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற மதுக்கரையை சேர்ந்த சிவமுருகேசன் என்பவரை கைது செய்தனர்.
கோவை: கோவையில் இருந்து மினி ஆட்டோ மூலம் ரேசன் அரிசி கடத்த முயன்ற நபரை சுந்தராபுரம் அருகே குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறை தலைவர் காமினி உத்தரவின் பேரில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து கேரளா மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க மாநில எல்லை சோதனை சாவடிகளில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில், பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் நேற்று காலை கோவை சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் செல்லும் சாலையில் ரோந்து மேற்கொண்டனர்.
அப்போது அங்கு வந்த மினி ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் விநியோகம் செய்யப்படும் ரேஷன் அரிசி தலா 50 கிலோ வீதம், 10 மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆட்டோவை ஓட்டி வந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் மதுக்கரை அட்லாண்டிக் நகரை சேர்ந்த ராம்பால் மகன் சிவமுருகேசன் (50) என்பதும், இவர் காந்திபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மலிவு விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை கேரளாவிற்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.