அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய கோடிக்கணக்கான ஆவணங்கள் பற்றி இன்னும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என திமுக செய்தி தொடர்பு துணைச் செயலாளர் கோவை செல்வராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனை என்னானது என திமுக செய்தி தொடர்பு துணைச் செயலாளர் கோவை செல்வராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் திமுக செய்தி தொடர்பு துணை செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
வரும் 23 ஆம் தேதி பீகார் மாநிலத்தில் மதச்சார்பற்ற அனைத்து கட்சியின் கூட்டம் நடைபெற உள்ளது. இதன் மூலம் மக்களின் சக்தி பற்றி பாஜகவினர் தெரிந்து கொள்வார்கள். தமிழகத்தில் முதலமைச்சர் யார் வேண்டுமானாலும் அமைச்சராக்கலாம், அமைச்சர் பதவியை மாற்றலாம்.
ஆனால் இதில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுகிறார். இந்திய அரசியலமைப்பு சட்ட அதிகாரத்தை மீறி செயல்படுவதால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மத்திய துறையான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என அனைத்து துறைக்கும் அண்ணாமலை பதில் சொல்கிறார். பாஜக இவருக்கு என்ன பதவி கொடுத்துள்ளது என சொல்ல வேண்டும்.
அண்ணாமலைக்கு வீட்டு வாடகை, விமானம் டிக்கெட் எல்லாம் நண்பர்கள் கொடுக்கிறார்கள் என்றால் மாதம் 9 லட்சம் நன்கொடையாக வாங்குகிறார். இரண்டரை வருடத்தில் 3 கோடி வரை பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாங்கிய பணத்திற்கு வருமான வரி கட்டி உள்ளாரா, அதே போல பணம் கொடுத்தவர்களும் வரி கட்டி உள்ளனரா என்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செம்மரம் கடத்துவது, தொழில் அதிபர்களை கடத்தி பணம் பறிப்பது உள்ளிட்ட நபர்களை அண்ணாமலை பாஜக கட்சியில் சேர்த்துள்ளார். இவருக்கு திமுகவை பற்றி பேசுவது அருகதை கிடையாது. அப்போதைய அதிமுக முதலமைச்சர் ஜெயலலிதா, பாஜகவின் கூட்டணியுடன் சேர மாட்டேன். ஆனால் அதனை எடப்பாடி மறந்துவிட்டு தற்போது செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
அதிமுக-வை கம்பெனி போல் நடத்துவது, இவர்கள் கொள்ளையடித்து சம்பாதித்த பணத்தை பாதுகாத்து கொள்வதற்காகவே பாஜகவுடன் கூட்டணியில் உள்ளனர்.
2017ஆம் ஆண்டு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் கோடிக்கணக்கான ஆவணங்கள் சிக்கியது. இது சம்மந்தமான குற்றப்பத்திரிக்கை, வழக்கு எங்கே? எப்போது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும்.
பாஜக தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் புகுந்த நபர் திடீர் மர்ம மரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். 2024ஆண்டில் பாஜகவிற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். டெபாசிட் இழந்து அதிமுக பாஜக கூட்டணி தேர்தலை சந்திக்கும்.
அதிமுக முன்னாள் அமைச்சர்களிடம் இருக்கிற பணத்தை எடுத்துவிட்டு ஜெயிலில் அடைப்பதா அல்லது கூட்டணியை தொடங்குகிறீர்களா என பாஜக தலைமை கேட்டுள்ளது. இதனால் தான் டெல்லிக்கு அழைத்து பேசுகிறார்கள். இதனால் அதிமுகவினர் பணிந்து போகிறார்கள்.
செந்தில் பாலாஜி கைது, பழிவாங்கும் நடவடிக்கை. தற்போது ஒரு செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர். ஒரு லட்சம் செந்தில் பாலாஜி திமுகவில் உள்ளனர். அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் தனி தனி கூட்டணியாக உள்ளனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி தன்னிச்சையாக செயல்பட முடியாது.
சுயநலத்திற்காக கட்சி நடத்தப்படுகிறது. முன்னாள் அமைச்சர் 31 பேரும் குற்றவாளிகள் போல் பயந்து கொண்டிருக்கின்றனர். அண்ணாமலை கட்சி தொண்டர்களிடையே பணம் வாங்கி கொண்டு சம்பாதிக்கிறார். ஓசியில் வாங்கி தின்று கொண்டு கட்சி வேலை பார்க்கிறார்.
முன்னாள் பாஜக தலைவர்கள் இப்படி செயல்படவில்லை. அரசாங்கத்திற்கு இவர் ஏஜென்டா. காயத்திரி ரகுராமுக்கு பதில் சொல்ல முடியாமல் அண்ணாமலை உள்ளார். அரவகுருச்சி தேர்தலில் அண்ணாமலை ஓட்டுக்கு பணம் கொடுத்தது குறித்து கேட்டத்தினால் தான் செந்தில் பாலாஜி மீது கோபத்தில் இப்படி செய்துள்ளனர்.
அண்ணாமலைக்கே சுயநினைவு இல்லாம செயல்படுகிறார். அவரை மருத்துவமனை சென்று பரிசோதிக்க வேண்டும். செந்தில் பாலாஜி நேர்மையானவர், எதிர்காலத்தில் நல்ல தலைவராக செயல்படுவார். அதிமுகவினரை தாமரை சின்னத்தில் போட்டியிட வைப்பார்கள் பாஜகவினர்.
இவ்வாறு அவர் கூறினார்.