உலக யோகா தினத்தை முன்னிட்டு பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள பயனீர் மேல்நிலை பள்ளியில் நடந்து வரும் தேசிய மாணவர் படை பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள மாணவ, மாணவிகள் யோகா ஆசனங்களை செய்து காண்பித்து அசத்தினர்.
கோவை: செல்வபுரம் அடுத்த கட்டாஞ்சி மலை பகுதியில் தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் மாணவர்கள் உலக யோகா தினத்தையொட்டி யோகாசனங்கள் செய்து காண்பித்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
பெரியநாயக்கன்பாளையம் அடுத்த ஜோதிபுரத்தில் உள்ள பயனீயர் மேல்நிலை பள்ளியில் என்.சி.சி மாணவர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில், கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி பள்ளிகள், சர்வஜன மேல்நிலைப்பள்ளி, பி.எஸ்.ஜி. கல்லூரி உள்ளிட்ட 13 கல்வி நிறுவனங்களில் உள்ள என்சிசி மாணவ மாணவர்கள் பங்கற்றுள்ளனர்.
இந்நிலையில் புதன்கிழமை உலக யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விழாவை பயனீர் கல்வி நிலையங்களின் செயலர் அபர்ணா ராஜ்குமார் தொடங்கி வைத்தார்.
இதற்கு பயனீர் கல்வி நிலையங்களின் நிர்வாக அதிகாரி பத்மநாபன் முன்னிலை வகித்தார். இதில் ஏறத்தாழ 450க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படையினர் மைதானத்தில் வரிசையாக அமர்ந்து பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் செல்வபுரம் அருகே உள்ள கட்டாஞ்சி மலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு யோகா தினத்தின் முக்கியத்துவம் குறித்து முகாமின் கமாண்டிங் அதிகாரி மேஜர் பி. அசோக்குமார் விளக்கினார்.
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த துறவிகளால் தோற்றுவிக்கப்பட்ட யோகாவின் அத்தியாவசிய தேவை, முக்கியத்துவம், இன்றைய இளைய சமுதாயத்தினர் இதை பின்பற்ற வேண்டியதன் நோக்கம் குறித்து உதவி கமெண்டிங் அதிகாரி விஜயகுமார் ரெட்டி விளக்கினார்.

பின்னர் பத்துக்கும் மேற்பட்ட யோகாசனங்களை மலை முகடுகளில் பாறைகளில் அமர்ந்து தேசிய மாணவர் படையினர் செய்து காண்பித்தது அந்த மலைப் பாதையில் வந்த பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இந்நிகழ்ச்சிகளில் பல்வேறு பள்ளிகளை சார்ந்த என்சிசி அலுவலர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பயணியர் மேல்நிலைப் பள்ளியின் என்.சி.சி அலுவலர் ராஜ்மோகன் செய்திருந்தார்.