திருப்பூரில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் ரூ.50 மதிப்புள்ள துடைப்பத்தை ரூ.440 என தீர்மானம் நிறைவேற்றி வாங்கி இருப்பதே திமுக ஆட்சியின் நேர்மையான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு என கூறினார்.
திருப்பூர்: ரூ.50 மதிப்புள்ள துடைப்பத்தை ரூ.440 என தீர்மானம் நிறைவேற்றி வாங்கி இருப்பதே திமுக ஆட்சியின் நேர்மையான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு என முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

விலைவாசி உயர்வு மற்றும் அமலாக்கத்துறை விசாரணையின் கீழ் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக மாநகர மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது,

தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் மூலம் அரசு ஆண்டுக்கு 4000 கோடி ரூபாய் ஊழல் செய்து வருகிறது. பாட்டில் முதல் டம்ளர் வரை அனைத்திலும் ஊழல் செய்யும் திமுக அரசை மக்கள் அப்புறப்படுத்துவதற்கு தொடக்க போராட்டமாக இந்நாளை கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
திமுக ஆட்சியை அகற்றும் வரை இந்த போராட்டம் தொடரும். திருப்பூர் மாநகராட்சியில் 50 ரூபாய் மதிப்புள்ள துடைப்பத்தை 440க்கு தீர்மானம் நிறைவேற்றி மாநகராட்சி நிர்வாகம் வாங்கி இருப்பதன் மூலம் மாநகராட்சியின் நேர்மையான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இதுபோல அனைத்து வகையிலும் திமுக அரசு ஊழல் செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.