சிங்காநல்லூரை சேர்ந்த பாஜக ஆதரவாளரான உமா கார்கி (56) முதல்வர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி, பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து அவதூறு தகவல்களை பரப்பியதாக கைது செய்யப்பட்ட நிலையில், அவரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கோவை: முதல்வர் மற்றும் பெரியார் குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட உமா கார்க்கியை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் உமா கார்கி (56). பாஜக ஆதரவாளரான இவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதி, பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து அவதூறு தகவல்களை பரப்பியதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் தி.மு.க. பிரமுகர் ஹரீஷ் என்பவர் புகார் அளித்தார்.
அதன்பேரில் அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமா கார்கியை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் உமா கார்கியிடம் சில தகவல்களை பெற வேண்டி இருந்ததால் அவரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் கோவை 4வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, கைதான உமா கார்கியை ஒரு நாள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். அதன்படி போலீசார் உமாகார்கியை இன்று ஒரு நாள் மட்டும் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.