உடுமலை வார சந்தைக்கு எதிரே ராஜேந்திரா ரோட்டில் வாடகை வாகனங்கள் நிறுத்தக்கூடாது என நகராட்சி அதிகாரிகள் கூறியதால், வாழ்வாதாரம் இழந்துள்ள வாடகை வாகன ஓட்டுனர்கள், மீண்டும் அதே இடத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யு கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர்: உடுமலை அருகே ராஜேந்திரா ரோட்டில் வாடகை வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யு கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியில் வாரச்சந்தைக்கு எதிர்ப்புறம் உள்ள ராஜேந்திரா ரோட்டில் கடந்த 30 ஆண்டுகளாக மினிடோர், டூரிஸ்ட் கார், வேன், டெம்போ உள்பட 100க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வாடகைக்கு ஓட்டி தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த இடத்தில் போக்குவரத்து நெருக்கடி உள்ளது. எனவே வாகனங்களை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் நிறுத்த வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சி.ஐ.டி.யு சங்கத்தின் தலைமையில் ஒன்று சேர்ந்து உடுமலை நகர மன்ற தலைவர் மு.மத்தீனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்தையில் ஏற்கனவே உள்ள அதே இடத்தில் தொடர்ந்து வாகனங்களை நிறுத்திக் கொள்வது என்றும், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாகனங்களை சீராக முறைப்படுத்தி நிறுத்திக்கொள்வது என்றும் பேசி முறைப்படுத்தப்பட்டது.
இப்பேச்சுவார்த்தையில் CITU நிர்வாகிகள் தண்டபாணி, மதுசூதனன், பஞ்சலிங்கம், சுதா சுப்பிரமணியம்,இயேசு ராஜ், தோழர் ராஜா உள்பட வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.