கோவை குறிச்சி பிரிவு அருகே இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளம் தம்பதி அசாருதீன் - சபீனா ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் 1.3 கிலோ அளவிலான கஞ்சாப் பொட்டலங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் குறிச்சி பிரிவு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குறிச்சி பிரிவு அருகே இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக போத்தனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து உதவி ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீசார் குறிச்சி பிரிவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த தனியார் உணவகம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த பெண் உட்பட இரண்டு பேரை, போலீசார் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் பிடிபட்ட நபர்கள் குனியமுத்தூர் கங்கா நகர் 8 ஆவது வீதியை சேர்ந்த சிராஜுதீன் மகன் அசாருதீன் (30), மற்றும் அவரது மனைவி சபீனா (30) என்பதும் தெரியவந்தது.
மேலும் இருவரும் தனித்தனியே கஞ்சாவை சிறு சிறு பொட்டலங்களாக மறைத்து வைத்திருந்து, அதனை இளைஞர்களை குறி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் சபீனாவிடமிருந்து 1.1 கிலோ மற்றும் அசாருதீனிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.