தமிழகத்தில் கல் மற்றும் மணல் குவாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து சம்மேளன நிர்வாகிகள், கல் குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதல்வரின் குடும்பத்தினருடன் தொடர்புடைய நிறுவனங்களே காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை: கல் குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதல்வரின் குடும்பத்தினருடன் தொடர்புடைய நிறுவனங்களே காரணம் என தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து சம்மேளன நிர்வாகிகள் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கல் மற்றும் மணல் குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து சம்மேளன நிர்வாகிகள் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அவ்வமைப்பின் தலைவர் செல்ல ராஜாமணி பேசியதாவது,

குவாரி உரிமையாளர்களின் இந்த வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் 50,000 லாரிகளுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கல், மண், மணல் உள்ளிட்டவை இன்றியமையாத அத்தியாவசிய பொருளாக தற்போது மாறியுள்ளது. எம்.சாண்ட் ஏற்றிச் செல்லும் லாரிகள் இல்லாமல் கட்டுமான பணிகளில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கனிம வளங்கள் எடுத்துச் செல்வதற்காகவே வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் பல்வேறு வகையில் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் விதிகளை மீறி இயங்கும் குவாரிகளை மூட வேண்டும். தமிழகத்தில் 450 குவாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ள நிலையில் 3000க்கும் மேற்பட்ட குவாரிகள் அனுமதி பெறாமல் இயங்கி வருகிறது.
தமிழகத்தில் அனுமதி இன்றி குவாரிகள் செயல்பட்டு கனிம வள கடத்தல்கள் நடைபெறுவதற்கு அரசு அதிகாரிகளே காரணம். மாதம் ஒருமுறை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். கனிமவளத்துறை அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.
கோவை, நெல்லை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளில் தினசரி கனிம வளங்கள் கேரளா மற்றும் கர்நாடகாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கனிம வள கொள்ளைக்காக பயன்படுத்தப்படும் லாரிகளுக்கு மொத்தமாக லஞ்சம் பெறும் அதிகாரிகள் அந்த வாகனங்கள் அதிகாரம் ஏற்றி சென்றாலும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். ஆனால் தமிழக பதிவெண் கொண்ட லாரிகளில் ஒரு யூனிட் அளவிற்கு அதிகாரம் ஏற்றினாலும் அபராதம் விதித்து வருகின்றனர்.
கனிம வளத்துறை அதிகாரிகள் கண்துடைப்புக்காக மட்டுமே பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். அரசே பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது. இதேபோல் தமிழக முதல்வரின் குடும்பத்தினருடன் நெருக்கமான தொடர்புடைய நிறுவனங்களே இந்த கனிமவள கொள்ளை போன்ற முறைகேடுகளுக்கு காரணம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.