பீளமேடு ரயில்வே மேம்பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அங்கு போக்குவரத்து போலீஸாரை நியமித்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 26 ஆவது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி மாநகரப் போக்குவரத்து காவல் துணை ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.
கோவை: பீளமேடு ரயில்வே மேம்பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசாரை நியமிக்க வேண்டுமென கவுன்சிலர் சித்ரா மனு அளித்துள்ளார்.
கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (போக்குவரத்து) மதிவாணனிடம், மாநகராட்சி 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
பீளமேடு ரயில்வே மேம்பாலத்தை சுற்றி எல்லைத் தோட்டம், முருகன் நகர், ஹட்கோ காலனி, காந்திமாநகர், வி.கே.ரோடு, கருப்பண்ண கவுண்டர் லே அவுட் உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் உள்ளன.
இந்த ரயில்வே மேம்பாலம் வழியாக இப்பகுதி மக்கள் மற்றும் அலுவலகங்கள். கல்லூரிகள், பள்ளிகள் என அன்றாட பணிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இந்த பாலத்தில் லாரிகள், கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி காலை 7 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து அதிகம் உள்ள நேரங்களில் செல்கின்றன.
இதனால் ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இப்பகுதியில் போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.