திருப்பூர் அடுத்த காயிதே மில்லத் நகர் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பொதுமக்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் கே.என்.நேரு, திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதாக உறுதி அளித்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் அடுத்த காயிதே மில்லத் நகரில் பொதுமக்கள் எதிர்த்து வந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படுவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வது வார்டு காயிதே மில்லத் நகர் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் 2 முறை மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அப்பகுதி பொதுமக்கள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதி பொதுமக்களை திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட இடத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சந்தித்து இந்த திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து பேசினார்.

ஆனால் அப்பகுதி பொதுமக்கள் இந்த திட்டத்தினால் தாங்கள் அச்ச நிலையில் இருப்பதால் இத்திட்டம் மாற்று இடத்தில் நிறைவேற்ற வேண்டும் எனவும் இதே இடத்தில் நிறைவேற்றக்கூடாது என ஒருமித்த குரலாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது,

இந்த திட்டத்தால் ஏற்படும் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறிய நிலையிலும் அவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக இந்த திட்டமானது மாற்று இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த இடத்தில் போடப்பட்ட மதிப்பை விட கூடுதல் மதிப்பீட்டில் மாற்று இடத்தில் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.