குரு பௌர்ணமி தினத்தையொட்டி, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் டுவிட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உயிர் மூச்சு, முக்திக்கு நோக்கம் என என்னை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம். ஆனால், நான் எப்போதுமே உங்களுக்காக தான் இருக்கிறேன். என கூறியுள்ளார்.
கோவை: நான் எப்போதுமே உங்களுக்காக தான் இருக்கிறேன் என குரு பௌர்ணமியையொட்டி பக்தர்களுக்கு ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த குரு பெளர்ணமி தினமான நேற்றைய தினம் சத்குரு, அனைவருக்கும் தன் அருளாசிகளை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விடியோவில் கூறியிருப்பதாவது,
சத்குரு, உங்கள் இதய துடிப்பாக இருக்க முடியும், உங்கள் உயிர் மூச்சாக இருக்க முடியும் அல்லது உங்கள் முக்திக்கு நோக்கமாகவும் இருக்க முடியும். உங்கள் விருப்பம், நீங்கள் என்னை எப்படி வேண்டுமென்றாலும் எடுத்து கொள்ளலாம். ஆனால், நான் எப்போதுமே உங்களுக்காக தான் இருக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
நம் பாரத கலாச்சாரத்தில் ஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு குருவின் தேவையும், அவரின் வழிகாட்டுதலும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சத்குரு ஜக்கி வாசுதேவ், சம காலத்தில் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான ஆன்மீக சாதகர்களுக்கு குருவாக விளங்குகிறார்.
குரு பெளர்ணமியை முன்னிட்டு சத்குருவின் அன்பளிப்பாக, 'உயிர் நோக்கம்' என்ற எளிய ஆன்மீக பயிற்சி தமிழ் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
ஆன்லைன் வாயிலாக ஜூலை 7 முதல் ஜூலை 9 வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த யோகா வகுப்பில் பஞ்ச பூதங்களின் உதவியுடன் ஒருவர் தனது உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள் கற்றுக் கொடுக்கப்படும்.
இவ்வகுப்பில் பங்கேற்க Isha.co/unosm என்ற இணையதள முகவரியில் ஜூலை 4-ம் தேதி நள்ளிரவுக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.