ஆலாந்துறை அடுத்த கூத்தாண்டவர் கோவில் தெருவில் அரசு துவக்கப்பள்ளி அருகே இருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசமரம், வலுவிழந்து காணப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் வீசிய காற்றில் வேரோடு சாய்ந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை: கோவை மாவட்டம் ஆலாந்துறையில் பள்ளி அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த கூத்தாண்டவர் கோவில் தெருவில் அரசு துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளிக்கு அருகிலேயே நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த அரச மரம் ஒன்று இருந்து வந்தது.
இந்த அரச மரம் வலுவிழந்து காணப்பட்ட நிலையில் இன்று மதியம் சுமார் 2 மணிக்கு மேல் அப்பகுதியில் வீசிய காற்றின் காரணமாக அரசமரம் வேரோடு சாய்ந்தது.
மரம் சாய்ந்த சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கிருந்து விலகி ஓடினர். இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ கட்சிகள் வைரலாகி வருகிறது.
அதே சமயம் மரம் சாய்ந்தது மதியம் என்பதால் பள்ளி குழந்தைகள் யாரும் வெளியில் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.