மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து ஐந்து வேன்கள் மூலம் 100 பேர் தாராபுரம் வழியாக கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்ற போது ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த வேன் விவசாய நிலத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உட்பட 16 பெண்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பூர்: தாராபுரம் அருகே கோவை ஈஷா யோகா மையத்துக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பெண்கள் காயம் அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து ஐந்து வேன்களில் 100 க்கும் மேற்பட்டோர் சீர்காழியிலிருந்து மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றுவிட்டு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்துக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மோதுப்பட்டி பகுதியில் உள்ள ஒட்டன்சத்திரம் - அவிநாசி பாளையம் நான்கு வழிச்சாலை வழியாக வந்து கொண்டிருந்த போது ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் வேன் கட்டுப்பாட்டை இழந்து விவசாய நிலத்தில் புகுந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணித்த மூன்று குழந்தைகள் உட்பட 16 பேர் காயம் அடைந்தனர்.
விபத்தை நேரில் பார்த்த விவசாயி உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து நான்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஒரு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் 16 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு முதல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த நபர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து கள்ளிமந்தயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.