கோவை துடியலூர் காவல் நிலையம் அருகே குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீயணைப்புத் துறை மூலம் தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: துடியலூர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை துடியலூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் காவல் நிலையம் அருகில் உள்ள சந்தைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று வாரச்சந்தை தொடங்க இருந்த நிலையில் அதிகாலை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செவர்லட் காரின் முன்பகுதியில் திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.
தீ மலமலவென எரியவே அருகில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர்.
இதையடுத்து கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் வந்த 5 தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர்கள் சிறிது நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் அங்கிருந்த குப்பைகளுக்கு யாராவது தீ வைத்து அது காரில் பற்றியதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.