அதிமுக உறுப்பினர் வெற்றி பெற்ற தொகுதி என்பதால், ஆளும் கட்சி பல்லடம் தொகுதியை புறக்கணிப்பதாகவும், தொகுதியில் நடக்கும் நிகழ்வுகளுக்கு எம்.எல்.ஏ என்ற முறையில் தனக்கு அழைப்பிதழ் வழங்கப்படுவதில்லை எனவும் அதிமுக எம்.எல்.ஏ எம்.எஸ்.எம் ஆனந்தன், குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூர்: பல்லடம் தொகுதியை ஆளும் கட்சி புறக்கணிக்கிறது என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம் ஆனந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.
பல்லடம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம் ஆனந்தன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் போது பல்லடம் தொகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வெளிவட்ட சாலைக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு 45 கோடியில் நிலம் கையகப்படுத்த நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், ஆட்சி மாறிய பின் பணி தொடங்கப்படாமல் இருக்கிறது. அதனை ஆய்வு செய்து பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லடம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 10 வார்டுகளில் சாலை வசதி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனு அளித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் திருப்பூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அவை தற்போது கைவிடப்பட்டிருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாக கூடிய சூழ்நிலை நிலவி வருகிறது.
பல்லடம் நகராட்சியில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வுக்கும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனக்கு அழைப்பிதழ் வழங்கப்படுவதில்லை. ஆளும் கட்சியினரால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் பல்லடம் தொகுதி புறக்கணிக்கப்படுகிறது.
மேலும் பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் திமுக மாவட்ட செயலாளர் என்ற பெயரில் மற்ற தொகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அரசு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கும் நிலை உள்ளது.
இதேநிலைத் தொடர்ந்தால் அரசு நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் பங்குபெறும் நிகழ்வில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.