வால்பாறை அடுத்த பாரலை எஸ்டேட் அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து நேற்றிரவு வெளியேறிய 6 காட்டு யானைகள் அதிகாலை ஆனைமலை கிளப் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த கட்டிடத்தின் ஜன்னல் கதவு போன்றவை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: வால்பாறை அருகேயுள்ள ஆனைமலை கிளப் கட்டிடத்தை காட்டு யானைகள் இடித்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் தனியாகவும் கூட்டமாகவும் ஆங்காங்கே பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் சுற்றி வருகிறது.
வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீட்டின் ஜன்னல் கதவு, சத்துணவு மையம், மளிகை கடைகள், போன்றவர்களை உடைத்து சேதப்படுத்தி உள் இருக்கும் உணவு பொருட்களை சாப்பிட்டு செல்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 6 காட்டு யானைகள் அதிகாலை 3 மணியளவில் பாரலை எஸ்டேட் பகுதியில் உள்ள ஆனைமலை கிளப் பகுதிக்குள் நுழைந்து கட்டிடத்தின் ஜன்னல் கதவு போன்றவை உடைத்து சேதப்படுத்தியது.
மேலும், கண்ணாடி ஜன்னலை உடைத்தும், இருப்பு அறை மற்றும் சமையல் அறை தங்கும் அறை போன்றவற்றின் ஜன்னல், கதவு போன்றவைகளை உடைத்து சேதப்படுத்தியது.
அப்போது, இரவு பணியில் இருந்த வேல்சாமி மற்றும் சின்னப்பராஜ் ஆகியோர் மேற்கூறையில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை அப்பகுதியில் இருந்து வனப்பகுதியில் விரட்டினர்.
காட்டு யானைகளின் நடமாட்டம் துவங்கி உள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.