கோவை மாவட்டம், மணிஸ் மேல்நிலைப்பள்ளியில் இன்று (8.03.2017) பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றதை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து, அவர் கூறுகையில்,

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் பத்தாம் வகுப்பான அரசு பொதுத்தேர்வு இன்று துவங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி ஆகிய இரண்டு கல்வி மாவட்டங்களாக கொண்டு தேர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை கல்வி மாவட்டத்தில் 101 தேர்வு மையங்களில் 34,505 மாணவ, மாணவிகளும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 38 தேர்வு மையங்களில் 8001 மாணவ மாணவிகளும் என மொத்தம் 42,505 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
மேலும், பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுத கோவை கல்வி மாவட்டத்தில் 9 மையத்தில் 1,117 நபர்களும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 1 மையத்தில் 326 நபர்களும் என 1443 பேர் விண்ணப்பித்து தேர்வு எழுத உள்ளனர்.
இதுமட்டுமின்றி பத்தாம் வகுப்பிற்கு தட்கல் தேர்வு முறையில் விண்ணப்பித்து 377 நபர்கள் 3 மையங்களில் தேர்வு எழுத உள்ளார்கள்.
இன்று நடைபெறுகின்ற தேர்வு மையங்களுக்கு தேர்வுகள் முடியும் வரை மாணவ மாணவிகள் மற்றும் தேர்வு எழுதுகின்றவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும்போது எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள 10 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான கல்வி அலுவலர்கள் தலைமையில் பறக்கும்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதுடன் ஒவ்வொரு மையத்திற்கும் காவல்துறையின் மூலம் உரிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே மாணவ மாணவிகள் எவ்வித அச்சமின்றி சிறப்பாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.