திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முகாமிற்கு தேவையான பொருட்களை பிரித்து அனுப்பும் பணி வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று துவங்கியது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாமிற்கான பணிகள் துவங்கியுள்ளன.
தமிழக அரசு செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்கான பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இதற்கான விண்ணப்ப பதிவு முகாம் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இதனிடையே தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்ற முடிவடைந்த நிலையில் முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகின்ற 24ஆம் தேதி துவங்கப்பட உள்ளது.
இதற்காக திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட 145 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 1,46,350 ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப பதிவு செய்வதற்கு தேவையான பொருட்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் பிரித்து அனுப்பும் பணி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.