உடுமலை வனப்பகுதியில் உள்ள மலைக்கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் சாலை வசதி இல்லாததால், மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் உயிரிழந்த நிலையில், இன்னும் 3 மாதத்தில் மலைக்கிராமங்களை இணைக்க சாலை அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: உடுமலை மலை கிராமங்களை இணைக்க 3 மாதத்தில் சாலை அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
உடுமலை வன குடியிருப்பு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் உடல்நலம் குன்றியதால் மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டி 5 கிலோ மீட்டர் தூரம் அவரை சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
உடுமலை வனப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்காக 5 கிலோ மீட்டர் சாலை அமைக்க கடந்த வாரம் உத்தரவாதம் அளிக்கப்பட்டு உள்ளது. சாலை அமைக்க டென்டர் கோரப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களில் சாலை வசதி செய்து தரப்படும். மேலும் இந்த பகுதி தவிர்த்து மற்ற மலை கிராமங்களிலும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்த பழனிச்சாமி குறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.